பஹல்காம் தாக்குதலை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ளது. UN Security Council condemned Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே பொங்கியெழுந்துள்ளது. மேலும் அனைத்து உலக நாடுகளும் ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் (UNSC) கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ”பாதுகாப்புக் குழுவின் தலைவர், பிரான்சின் ஜெரோம் போனாஃபோன்ட், பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், இந்தியாவுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் பஹல்காம் தாக்குதலை “கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்” என்று வர்ணித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஸ்திரமின்மையின் மையம் எந்த சித்தாந்தமும் அல்லது நோக்கமும் அப்பாவி பொதுமக்களைக் குறிவைப்பதை நியாயப்படுத்தாது என்று வலியுறுத்திய ஐநா பாதுகாப்பு கவுன்சில், மோதல் நிறைந்த பகுதிகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த சர்வதேச கவலையை UNSCயின் ஒன்றுபட்ட நிலைப்பாடு பிரதிபலிக்கிறது. ஜம்மு காஷ்மீர் ஸ்திரமின்மையின் மையமாக உள்ளது. குற்றவாளிகள், ஏற்பாட்டாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள் உட்பட இத தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று UNSC வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தப்பட முடியாது சர்வதேச சட்டம் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களின் கீழ் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், அரசியல், சித்தாந்தம் அல்லது மத நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதம் நியாயப்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான கடமைகள் உட்பட சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட உறுப்பு நாடுகளை வலியுறுத்தி, ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை UNSC வலியுறுத்தியுள்ளது.